விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனரென்ற சந்தேகத்தின் பேரில் 2014 ஆம் ஆண்டு வடக்கிலும் கொழும்பிலும் கைது செய்யப்பட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் எதுவித குற்றசாட்டுகளுமின்றி இவர்களை (21) விடுதலை செய்துள்ளது.
21 சந்தேக நபர்களின் வழக்கு விசாரணையும் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆஜராகியிருந்தனர். 21 தமிழ் அரசியல் கைதிகளும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு, வவுனியா, கிளிநொச்சி, பூசா ஆகிய முகாம்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர், சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சிறைக்கைதிகள் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
இதன்போது அவர்களது உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதும்,இவர்களது விடுதலைக்காக பல சாத்வீக போராட்டங்களை மேற்கொண்டனர்.இதன் காரணமாக 2015 – 2016 ஆண்டு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் 21 நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இந்நபர்களின் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரனைகளின் பின்னர் 21 பேரும் குற்றசாட்டுக்களின்றி அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலையாகினர்.




Discussion about this post