மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக் கப்பலில் 152 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கடத்தியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடி கப்பலில் உள்ள மீன் மற்றும் ஐஸ் சேமிப்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு தலா 25 கிலோ எடையுள்ள 08 பைகளில் போதைப்பொருள் தொகையை கடத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
இரத்மலானை பகுதிக்கு அண்மித்த கடலில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபர்களின் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்ததோடு, தீர்ப்பை அறிவித்த நீதிபதி நாமல் பண்டார பலாலே, பிரதிவாதிகளுக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன் ஏதாவது சொல்ல வேண்டுமா என நீதிபதி கேட்டுள்ளார்
இதன்படி, குற்றவாளிக் கூண்டில் இருந்து தனது வாக்குமூலத்தை முன்வைத்த முதலாம் பிரதிவாதி, எந்தவிதமான தண்டணை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஏனைய நான்கு பிரதிவாதிகளையும் விடுதலை செய்யுமாறு தெரிவித்தார்.
மற்ற நான்கு பிரதிவாதிகளும் தாங்கள் அப்பாவி மீனவர்கள் என்றும் இந்தக் குற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
அனைத்து விடயங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அறிவித்தார்.






Discussion about this post