அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென்றும் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக்கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பதுளை மாவட்டச் செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இப்பகுதிகளில் உள்ள பைனஸ் மரங்களை அகற்றுவதற்கு முன்னர் அது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
ஆங்கிலேயர்கள் இந்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பைனஸ் பயிர்ச்செய்கை இருக்கும்போதே தான் தேயிலையையும் பயிரிட்டனர். எனவே தவறான கருத்துக்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
இதனால் பைனஸ் பயிர்ச்செய்கையை அகற்றுவதற்கு முன்னர் இது நீரேந்துப் பிரதேசங்களைப் பாதிக்கிறதா என்பது தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக ஆராய்தல் வேண்டும்.
பைனஸ் பயிர்ச்செய்கையை நீக்கிவிட்டு டர்பன்டைன் பயிர்ச்செய்கையில் எதற்காக ஈடுபட்டீர்கள். டர்பைன்டைன் பயிர்ச்செய்கைக் காரணமாக நீரேந்துப் பிரதேசங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அப்பயிர்ச்செய்கையை நீக்கிவிடுங்கள்.
அரச அதிகாரிகள் திறமையாக செயல்பட வேண்டும். எனக்கு காரணங்கள் தேவையில்லை. அரச திணைக்களங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட வழியில்லை. அரசாங்கம் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
பெருந்தோட்டத் துறையில் சில அதிகாரிகள் சட்டக் கோவைகளை கேடயமாக வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர். 80 களில் இந்தச் சட்டத்தை தயாரிக்கும் போது இது குறித்து நான் கவனம் செலுத்தினேன்.
இப்பிரதேசத்திலுள்ள கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியபோது, ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிடப்பட்டது.
ஆசிரியர் நியமனங்களைப் பெற்று, ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே நியமனம் பெற்று ஐந்து வருடங்களுக்கு இடமாற்றங்களை வழங்காமை தொடர்பில் கல்வியமைச்சும் மாகாண சபையும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்






Discussion about this post