இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21 ஆம் திகதி 5.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன.
இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் குழந்தைகள் என்பதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
சியாஞ்சூர் பகுதியில் குகநாங் துணை மாவட்டத்தில் நக்ராங் கிராமத்தில் நடந்த மீட்பு பணியின் போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த Ajka Maulana Malik என்ற அந்த சிறுவனை இந்தோனேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். குறித்த சிறுவனின் பாட்டி உயிரிழந்துள்ளார். அவரின் உடல் அருகிலேயே சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பெற்றோர் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டன.





Discussion about this post