அராஜகத்தைக் கைவிட்டு ஒரு வருடத்துக்கு சுதத்திரமாக சுவாசிப்பதற்கு இடமளித்து அரசியல் செய்யுமாறு தாம் அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
‘நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துங்கள், எனினும் வீதிகள் மூடப்படும் போது நாடு வீழ்ச்சியுறுவதைத் தடுக்க முடியாது போகும் என்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவிலிருந்து கொரோனாவுக்குப் பின்னர் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ள நிலையில், முதற்கட்டமாக 120 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர், சுற்றுலாத்துறை பாதிப்படையும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். சீனாவிலிருந்து 5 இலட்சம் உல்லாசப் பிரயாணிகள் இவ்வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்தால், உல்லாசப் பிரயாணத்துறை பெரும் முன்னேற்றமடையும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் நிதிக்குச் சமமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




Discussion about this post