இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில், பியசிறி விஜேநாயக்க உள்ளிட்ட 7 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகாததை கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்த நிலையில் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.






Discussion about this post