ஒருசில பொலிஸ் நிலையங்கள் போதைப்பொருள் மாதிரிகள் தொடர்ச்சியாக இருபது அல்லது முப்பது தடவைகள் அனுப்பிவைக்கும் நிலைமை இருப்பதாகவும் போதைப்பொருள் அல்லாத விடயங்களை சமர்ப்பித்து பழிவாங்குவதற்காக ஒருசில பொலிஸ் அதிகாரிகள் போலி வழக்குகளைத் தாக்கல் செய்வதாகவும் மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை நிலை இருப்பதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இந்த வாரத்தில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு போதைப்பொருள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தொடர்புடைய சட்டங்களை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் போதைப்பொருள் தொடர்பான வழக்குத்தாக்கல்களை முன்னெடுக்கும்போது பொலிஸாரால் பின்பற்றப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிலவேளைகளில் ஒருசில மாதிரிகள் தவறாகலாம். ஒருசில பொலிஸ் நிலையங்களில் 20 – 30 மாதிரிகள் தவறாகின்றன. போதைப்பொருளில் அடங்காத பொருட்களை நச்சு மருந்துகள் என்று தெரிவித்து மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, சட்டத்தில் ஒருசில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது.
வலிநிவாரணி மாத்திரைகளை தூளாக்கி சந்தேக நபரொருவரை ஆஜராக்கி, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரை விளக்கமறியலில் வைக்கிறார்கள். சில மாதங்கள் கடந்து இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வெளிவரும்போது அதில் நச்சு மருந்துகள் உள்ளடக்கப்பட்டிருக்காது. பழிவாங்குவதற்காக போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




Discussion about this post