தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பர்ஹானா’. ஒரு நாள் ஒரு கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள இந்தப்படம் குறித்த சர்ச்சைகளுக்கு தயாரிப்பு நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள ‘பர்ஹானா’ படத்தில் இயக்குனர் செல்வராகவன், சித்தன் ரமேஷ், அனுமோல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியான சமயத்திலிருந்தே பலவித சர்ச்சைகளை கிளம்ப ஆரம்பித்தது. இந்தப்படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் ‘பர்ஹானா’ படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய சிந்திக்க தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனம் மிகுந்த சமூக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது.
மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு அரசால் முறையாக தணிக்கை செய்யப்பட்டு வெளியாகவுள்ள ‘பர்ஹானா’ படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையை தருகிறது. பர்ஹானா படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல.
மேலும் மனித குலத்திற்கு எதிரான ஒரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை. விரும்புவதுமில்லை. இதை எங்களின் ‘பர்ஹானா’ படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலை படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட ஒரு படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு உள்ளாக்குவதும் முறையானதல்ல.
அது அவ்வாறு எதிர்ப்பவர்களை சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். இந்தபடம் ஐக்கிய அரபு நாடுகளிலே எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்கு தயாராகிவிட்டது. இதுவே ‘பர்ஹானா’ எந்த விதமான சர்ச்சையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது.




Discussion about this post