மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கூட்டம் தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை முன்வைக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் வாழும் எமது இந்திய வம்சாவளி மக்கள் இங்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் நாள் வேதனத்தையே பெறுகின்றனர். இது அவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாக அமையாது. எனவே, இலாப பங்கீட்டு முறையுடன் அவர்களையும் இந்த தொழில்துறையில் உற்பத்தியாளர்களாக மாற்றுவதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும்.
இதற்குரிய வேலைத்திட்டமே எனது அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
வேலையின்போது குளவி கொட்டுதல் உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழப்பு சம்பவங்கள் கூட பதிவாகியுள்ளன. சிலர் அங்கவீனமடைகின்றனர்.தற்போது தொழில்துறை மாற்றம் பற்றி பேசப்படுகின்றது. ஆகவே, அரச அங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதேவேளை, பெருந்தோட்டத்தொழிலாளர்களை கௌரவிப்பதற்கான நாளொன்றை ஒதுக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்.” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.






Discussion about this post