கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக தெங்குப் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி அக்கராயன் ஆணை விழுந்தான், வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளில் தெங்குப் பயிர் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிக வரட்சி காரணமாக தென்னை மரங்கள் கருகி அழிவடைந்து வருவதுடன் இளநீர் குரும்பை என்பனவும் நீரின்றி காய்ந்து கருகி விழுகின்ற நிலை காணப்படுகின்றது. இதனை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் வரட்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் குடிநீர் நெருக்கடி காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம் ஆரோக்கியபுரம், அமைதிபுரம், கோட்டைகட்டி, துணுக்காய், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் வரட்சி காரணமாக அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக அன்றாட தேவைக்கான குடிநீரை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பூ நகரி பகுதியிலுள்ள நீர்நிலைகளும் வற்றி காணப்படுவதால் கால்நடைகள் குடிநீர் தேடி அலையும் நிலை காணப்படுகின்றது.
குறித்த பிரதேசங்களில் நிலவி வரும் வரட்சி காரணமாக கிணறுகளில் நீரின்மை என்பவற்றால் தென்னை மற்றும் வாழை, பப்பாசி போன்ற பயிர்களும் அழிவடைந்து வருகின்றது.






Discussion about this post