ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.
சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு விளையாட்டுச் சம்மேளனங்களின் அதிகாரிகளை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்நாட்டிலிருக்கும் 77 கிரிக்கெட் சங்கங்களில் 68 சங்கங்கள் மாத்திரமே செயற்பாட்டில் உள்ளன. அந்த சம்மேளங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தாலும் 2024 க்கு முன்னதாக மீண்டும் ஒரு முறை அவர்களை சந்தித்து அவர்களின் பொறுப்புக்கள் தொடர்பில் வலியுறுத்தவிருக்கிறோம்.
விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு மேற்படி சம்மேளனங்களின் பிரதானிகளை அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனூடாக பேச்சுவார்தை ரீதியான இணக்கப்பாட்டுடன் அந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். அதேபோல் விளையாட்டுத்துறை அபிவிருத்தியின் போது ஆவணங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டு கிடக்கும் விளையாட்டுச் சம்மேளனங்களை செயற்பாட்டு நிலைமைக்கு கொண்டு வரவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி 2024 ஆம் ஆண்டில் கிராமங்களுக்கும் விளையாட்டுக்களை கொண்டுச் செல்லும் வகையிலான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
அதேபோல் உத்தேச வேலைத்திட்டங்களுக்காக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு 125 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச நிதித் தொகையைக் கொண்டே அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
அதேபோல், 2024 ஆம் ஆண்டளவில் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.




Discussion about this post