வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார்.
அஹ்னாஃப் தஹ்மீத் என்ற அச்சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்களின் அனுமதியைப் பெறாமலேயே ‘முழு மயக்க மருந்து’ கொடுத்த காரணத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில், அயன் அகமது என்ற சிறுவனும் இதேபோன்று ஆணுறுப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். அப்போதும் இதே குற்றச்சாட்டை அச்சிறுவனின் குடும்பத்தார் எழுப்பினர்.
வங்கதேசத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக, முடிதிருத்துவோர் மயக்க மருந்து இல்லாமல் இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக, மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து எவ்வளவு முக்கியம்? அதில் என்ன ஆபத்து இருக்கிறது?
டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான டாக்டர் ஷா ஆலம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மயக்க மருந்து தேவை என்று பிபிசி வங்க மொழிச் சேவையிடம் கூறினார்.
“ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இச்சம்பவத்தில் மயக்க மருந்து தேவைப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேண்டும்,” என்று டாக்டர் ஆலம் கூறுகிறார்.
முறையான உடல் பரிசோதனை செய்யாமல் தவறான நேரத்தில் தவறான மயக்க மருந்து கொடுத்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர் ஷா ஆலம் தெரிவித்துள்ளார்.
தன் மகனுடன் ஃபக்ருல் ஆலம்
பத்து வயது அஹ்னாஃப் தஹ்மித், டாக்காவின் மாலி பாக் சௌதரி படாவில் உள்ள ஜே.எஸ். நோயறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையத்திற்கு அறுவை சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டதாக குழந்தையின் தந்தை ஃபக்ருல் ஆலம் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை 8:30 மணிக்கு முடிவடைந்தது, ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் சிறுவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதனால் ஃபக்ருல் ஆலம் கோபமடைந்தார்.
அவர் பிபிசி வங்க மொழிச் சேவையிடம், “எனது மகனுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த உறுதியான பதிலும் கொடுக்கப்படவில்லை. சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பும் என்று கூறினார்கள்,” என்றார்.
பத்து மணியளவில் மகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஆலமிடம் கூறப்பட்டது.
சிறுவனை உடனடியாக மற்றொரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) அழைத்துச் செல்ல வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. எனெனில் அந்த மருத்துவ மையத்தில் ஐ.சி.யூ இல்லை.
இதைத்தொடர்ந்து, சிறுவனை ஐ.சி.யூ-வுக்கு அழைத்துச் செல்ல அருகிலுள்ள தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டனர். இரவு 10:30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் அதற்குள் அஹ்னாஃப் இறந்துவிட்டார்.
ஃபக்ருல் ஆலம் தனது மகனுக்கு அனுமதியின்றி ‘முழு மயக்க மருந்து’ கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்.
அவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன் ‘முற்றிலும் மயக்கமடைந்து’ இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால்தான், என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, என் மகனுக்கு ‘முழு மயக்க மருந்து’ கொடுக்க வேண்டாம் என்று மருத்துவரிடம் சொன்னேன்,” என்றார்.
‘என் மகனை கொன்றுவிட்டனர்’
ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையின்போது 10 வயது சிறுவன் மரணம் – மயக்க மருந்து காரணமா?பட மூலாதாரம்,FAKHRUL ALAM
படக்குறிப்பு,
அஹ்னாஃப் தஹ்மித் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, சிறுவனின் குடும்பத்தார் செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர், அதில் மருத்துவமனை உரிமையாளர் மற்றும் பணியில் உள்ள மருத்துவர் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஃபக்ருல் ஆலம் கூறுகையில், “என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்றார்.
அஹ்னாஃப் தஹ்மித் டாக்காவில் உள்ள மோதி ஜீல் ஐடியல் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
அஹ்னாஃப்பின் குடும்பம் முன்பு டென்மார்க்கில் வசித்து வந்தது. அஹ்னாஃப் அங்குதான் பிறந்தார். தொழிலதிபர் ஃபக்ருல் ஆலம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 2017-இல் வங்கதேசம் திரும்பினார்.
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம், பதிவு செய்யாமலேயே இந்த ஆபத்தான கட்டுமானக் கட்டடத்தில் சுகாதார சேவைகளை அளித்து வந்தனர்.
ஒரு காலத்தில் மயக்கமருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.
நவீன மருத்துவ முறையில், மனித உடலில் சிறிய அல்லது பெரிய அறுவை சிகிச்சை செய்யும் முன் மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்கிறார்கள்.
மயக்க மருந்து உடல் அல்லது அதன் ஒரு பகுதியை மரத்துப்போகச் செய்கிறது. எனவே அறுவை சிகிச்சையின் போது நோயாளி எந்த வலியையும் உணர்வதிவில்லை.
டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான ஷா ஆலம், பிபிசி பங்களாவிடம், “இதை எந்த பிரச்னையும் இல்லாமல் செய்ய முடியும்,” என்று கூறினார்.
ஷா ஆலம் கூறுகையில், “மயக்க மருந்துகளில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்யும்போது, அந்த பகுதி மட்டுமே மரத்துப்போகும். இது ‘லோக்கல் அனஸ்தீசியா’ என்று அழைக்கப்படுகிறது” என்றார்.
பெரிய அறுவை சிகிச்சைக்கு முன், உடல் முழுவதும் மரத்துப் போவதற்கு மயக்க மருந்து செலுத்தப்படும் என்று கூறினார். இந்த நிலையில் நோயாளி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மீண்டும் எழுந்திருப்பார்.
யாருக்கும் மயக்க மருந்து கொடுப்பதற்கு முன், அவரது ரத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பெற பல பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்கிறார் ஷா ஆலம்.
எந்த வகையான மயக்க மருந்து இதற்கு பாதுகாப்பானது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
இதுதவிர, காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், இதய நோய் உள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கக் கூடாது என, டாக்டர் ஷா ஆலம் அறிவுறுத்தினார்.
இதுபோன்ற சமயங்களில் மயக்க மருந்து கொடுப்பது பாதுகாப்பானது அல்ல என்றார். அவரைப் பொறுத்தவரை, அத்தகைய சூழ்நிலை இருந்தால், ஒரு சிறப்பு மருத்துவரின் கருத்துடன் நோய் குணமடைந்தபின் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம்.
BBC







Discussion about this post