கார்த்திகை தீபத்திருநாளின் துவக்கமாக ஏற்றப்படுவதே பரணி தீபமாகும். இதை முறையாக ஏற்றுவதால் அளவில்லாத நன்மைகளை பெற முடியும். நம்முடைய பாவங்களை மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களின் பாவங்களையும் போக்கக் கூடிய அற்புதமான தீபம் பரணி தீபமாகும். பரணி தீபத்தின் சிறப்புகள், வீட்டில் பரணி தீபம் ஏற்றுவதற்கான நல்ல நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் தீபத்திற்கு பரணி தீபம்என்று பெயர். நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பல பாவங்களை செய்திருப்போம். இந்த பாவங்களில் இருந்தும், அவற்றால் ஏற்படும் தீய பலன்களில் இருந்தும் விடுபடுவதற்காக ஏற்றப்படும் தீபம் தான் பரணி தீபம். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜாவிற்கு உரிய நட்சத்திரமாகும். அதனால் பரணி நட்சத்திரம் வரும் நாளில் தீபம் ஏற்றி யமதர்ம ராஜாவை வழிபடுவதால் யமலோகத்தில் இருக்கக் கூடிய நம்முடைய முன்னோர்கள் துன்பப்படாமல் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மட்டும் தான் திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். முதலில் அண்ணாமலையான் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றப்படும். அதற்கு பிறகு மண்டபத்தில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். இந்த ஐந்து தீபங்களும் சிவ பெருமானின் ஐந்து தொழில்களையும், அவர் பஞ்சபூதத்தின் வடிவமாக எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் ஏற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். ஆனால் திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் மாலையில் தான் வீடுகளில் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.
பரணி தீபம் என்பது நம்முடைய பாவங்களை மட்டுமின்றி, நமக்கு முந்தைய மூன்று தலைமுறையினரின் பாவங்களையும் போக்கி, நம்முடைய முன்னோர்களுக்கு நற்கதியை வழங்கக் கூடியதாகும். இதனால் முன்னோர்கள் மகிழ்ந்து நமக்கு ஆசி வழங்குவதால், நமக்கு பித்ருதோஷம், பித்ருசாபம் இருந்தால் கூட அதில் இருந்து விடுபட முடியும். இந்த ஆண்டு பரணி தீபம் டிசம்பர் 02ம் தேதி செவ்வாய் கிழமை வருகிறது. இந்த நாளில் எந்த நேரத்தில், எந்த முறையில் வீட்டில் பரணி தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் 02ம் தேதியன்று மாலை 06.24 மணிக்கு துவங்கி, டிசம்பர் 03ம் தேதியன்று மாலை 04.47 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. இதனால் டிசம்பர் 02ம் தேதியன்று மாலை 06.30 மணிக்கு பிறகு இந்த பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். பரணி தீபம் ஏற்றுவதற்கு ஒரு தாம்பூலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோலமிட்டு, ஐந்து அகல் தீபங்களை மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து, நெய் தீபமாக ஏற்ற வேண்டும். இந்த ஐந்து அகல் விளக்குகளும் ஐந்து திசைகளை நோக்கி இருக்கும் படி ஏற்ற வேண்டும். இந்த விளக்குகளை வட்ட வடிவமாக ஏற்ற வேண்டும்.
வீட்டின் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றக் கூடிய தீபங்களுடன் சேர்த்து இந்த ஐந்து தீபங்களையும் ஏற்ற வேண்டும். வீட்டின் நிலைவாசலில் இரண்டு புறமும் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். முடிந்தால் வீடு முழுவதும் கூட தீபம் ஏற்றலாம். இது மிக மிக நல்லது. மற்ற தீபங்களை எண்ணெய் விட்டு ஏற்றினால் கூட தாம்பூலத்தில் ஏற்றக் கூடிய ஐந்து விளக்குகளையும் கண்டிப்பாக நெய் தீபமாக ஏற்ற வேண்டும்.










Discussion about this post