மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பேச்சுகளுக்காக அவரை விமர்சிக்கும் பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தம்மை பார்க்க வேண்டும் என காட்டமாக சாடியுள்ளது திமுகவின் முரசொலி நாளேடு.
முரசொலியில் இன்று எழுதப்பட்ட தலையங்கம்: நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறது ஆளும்கட்சியான பா.ஜ.க. ‘எதிர்க்கட்சிகள் என்ன முடக்குவது? இதோ நாங்களே அதைச் செய்து கொள்கிறோம்’ என்று கூச்சல் செய்து கொண்டு இருக்கிறது பா.ஜ.க. எதிர்க்கட்சிகளைப் பேச விட்டால் அவர்கள் அதானியை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதானியை நினைவூட்டினால் அதற்கு மோடி பதில் சொல்லியாக வேண்டும். அதானி விவகாரத்தைத் திசை திருப்புவதற்காக பா.ஜ.க. கண்டுபிடித்த வழிதான், லண்டனில் ‘ராகுல் பேசியது தவறு’ என்பது ஆகும்.
‘வெளிநாட்டில் போய் இந்தியாவைப் பற்றி பேசக் கூடாது. ராகுல் பேசியது தவறு’ என்று பா.ஜ.க. சொல்கிறது. இவ்வளவு நியாயவான்கள், இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் பேசியதை அனுமதித்தார்களா என்றால் இல்லை. நாடாளுமன்றத்தில் அதானிக்கும் மோடிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பக்கம் பக்கமாகப் பேசினார் ராகுல். வெளிநாட்டுக்கு எப்போதெல்லாம் பிரதமர் போகிறாரோ அப்போதெல்லாம் அந்தந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு அதானிக்கு அதிகம் ஆகிறதே அது எப்படி என்று ராகுல் கேட்டார். தேதி வாரியாகக் கேட்டார். மோடியின் பயணத் திட்டத்தையும் — அதானியின் வர்த்தகப் பெருக்கத்தையும் ஆதாரங்களுடன் வைத்துக் கொண்டு கேட்டார். இவை அனைத்தும் நாடாளுமன்றக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டன. மக்களவையில் ராகுல் பேச்சின் முக்கியப் பகுதிகளும், மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சின் முக்கியப் பகுதிகளும் நீக்கப்பட்டன. இந்திய நாடாளு மன்றத்தில் பேச அனுமதிக்காத இவர்கள்தான் ‘லண்டனில் எப்படி பேசலாம்?’ என்று கேட்கிறார்கள்.




Discussion about this post