பங்களாதேஷில் பிரதமரை பதவி விலகக் கோரி தலைநகர் டாக்காவின் பிரதான வீதிகளை முடக்கி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கற்களை எறிந்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது பங்களாதேஷ் பொலிஸார் இரப்பர் குண்டுகள் மூலம் சூடு நடத்தயதோடு கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
பங்களாதேஷ் தேசிய கட்சி ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை பஸ் வண்டிகள் மீது தீ வைத்ததோடு பெட்ரோல் குண்டுகளையும் எறிந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் ஷெய்க் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலை நடுநிலையான காபந்து அரசு ஒன்றின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பங்களாதேஷ் எதிர்க்கட்சியின் தலைவி காலிதா சியா கடந்த 2018 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற பின் அந்த கட்சி பெரும் குழப்பத்தை சந்தித்தபோதும் நாட்டின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருக்கும் சூழலில் அதன் பேரணிகளில் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் பங்கேற்று வருகின்றனர். பிரதமர் ஹசீனா 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் அதனை தக்கவைக்க எதேச்சதிகாரம், மனித உரிமை மீறல்கள், பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குதல் மற்றும் தம்மை விமர்சிப்பவர்களை சிறை வைத்து எதிர்க்கருத்துகளை ஒடுக்கி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளார்.





Discussion about this post